முண்டந்துறையில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடங்கி கொடைக்கானல், ஆனைமலை, நீலகிரி, சிறுவாணி அணை பகுதி உள்ளிட்ட இடங்களில் வசிக்கிறது. இந்த நிலையில் வரையாடுகளை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு நிதியாக 25 கோடி ரூபாய் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆண்டுதோறும் புலிகளை கணக்கெடுப்பது போல் வரையாடுகள் கணக்கெடுப்பும் நடக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பகுதிக்குள் வசிக்கும் வரையாடுகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
வனத்துறையினர் இன்று முதல் வருகிற 1 -ந் தேதி வரை 3 நாட்கள் நடத்துகின்றனர்.
இதையொட்டி (வரையாடு) கணக்கெடுக்கும் பணிக்காக சிறப்பு பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன் முண்டந்துறை வனத்துறை அலுவலகத்தில் வனச்சரகர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. முண்டந்துறை வனச்சரகத்தில் அடுப்புக்கல் மொட்டை, அகத்தியர் மலை, செம்புஞ்சு முட்டை, ஐந்தலை பொதிகை ஆகிய பகுதிகளில் வரையாடுகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் இதன் எச்சம், காலடித்தடம் வைத்தும், நேரடியாக பார்ப்பதை வைத்தும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என வனத்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்..