தெற்காசி மாவட்டம் சுரண்டை ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சுரண்டை ஏழு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 30 ம் தேதி தொடங்கியது. முதல் மண்டகப்படி
ஜமீன் தாரால் நடத்தப்பட்டது. 2-வது மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3-ம் நாள் மண்டகப்படி செட்டியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் சார்பிலும், 4-ம் மண்டக படி நாடார் சமுதாயம், 5-வது மண்டகப்படி சேனைத் தலைவர், முதலியார் சமுதாயத்தினர் சார்பிலும்.6 ம் ம் நாள் மண்டகப்படி படையாட்சி சமுதாயத்தினர், 7-ம் மண்டகப்படி கோட்டைத் தெரு தேவர் சமுதாயத்தினர் மண்டகபடியாகவும், 8-ம் நாள் அனைத்து சமுதாயம் சார்பில் முளைப்பாரி,தீச்சட்டி, ஆயிரம் பானை உருவம் மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பறவை காவடி எடுத்து வந்தனர்.
9-ம் நாள் திருநாளான நேற்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.தேரில் அம்மன் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுரண்டையை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம பொதுமக்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
நிறைவு நாளான இன்று 10 ம் திருவிழா விஸ்வகர்மா சமுதாயத்தினர்கள் சார்பில் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா,ஏழு சமுதாய நாட்டாமைகள்,விழா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
ஆலங்குளம்துணை காவல் கண்காணிப்பாளர் பர்ணபாஸ்ஜெயபால்,சுரண்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்,மது விலக்கு பிரிவு ஆய்வாளர் கபீர்தாசன், ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன், சுரண்டை உதவி காவல் ஆய்வாளர் சின்னத்துரை,
ஆகியோர் தலைமையில் போலீசார், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.