தென்காசி, மே – 20
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன் பொத்தை பகுதியில் நேற்று பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதல் காரணமாக அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கான டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
திருமண விழா முடிந்த நிலையில் மாலையில் அந்த டிஜிட்டல் பேனரை அப்புறப்படுத்துமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செங்கோட்டை பண்பொழி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.