கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், கோயம்புத்தூர் அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தேக்கம்பட்டி சிவக்குமார் கபடி குழுவினர் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கோவை,திருச்சி, திருநெல்வேலி,ஈரோடு உள்ளிட்ட 36 மாவட்டங்களிலிருந்து 36 அணிகள் கலந்து கொண்டன.
மூன்று தினங்கள் நடைபெற்ற போட்டிகளில் தகுதிச் சுற்று,கால்இறுதி,அரைஇறுதி, இறுதிப் போட்டி என 60 ஆட்டங்கள் நடத்தப்பட்டன.
இறுதி போட்டியில் ஈரோடு மாவட்ட அணியும், திண்டுக்கல் மாவட்ட அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஈரோடு மாவட்ட அணி 31 புள்ளிகளை எடுத்து திண்டுக்கல் அணியை வீழ்த்தி முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை தட்டிச்சென்றது. 23 புள்ளிகள் எடுத்து இரண்டாம் பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்ட அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பையும் மூன்றாம் இடத்தைப்பிடித்த திருநெல்வேலி மற்றும் சென்னை அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், கூடலூர் நகர மன்றத்தலைவர் அறிவுரசு, காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் தலைவர் சோலைராஜா, செயலாளர் ஹபிபுல்லா, கோயம்புத்தூர் அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள்,தேக்கம்பட்டி சிவகுமார் ஆகியோர் ரொக்கப்பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினர். இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 12 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு சார்பாக இந்திய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற மகளிர் கபடிப் போட்டிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்