ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள அறையில் வாக்கு பதிவு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 2-ந் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுகிறது. 2 அறைகளில் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி, வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டு இருந்த வசதிகள், ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.