முருகன் தெய்வானை இணைக்கு குடைவரை கோவில் ஓர் பார்வை! ஓர் பயணம்!!
மதுரை ஆனைமலையில் உள்ள முருகன் தெய்வானை இனைக்கு உள்ள குடைவரை கோவில் குறித்து அறிந்து கொள்ள மரபு வழி பயணமாக ஓர் பார்வை ஒரு பயணத்தினை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழுவினர் மேற்கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன் முகமது ஜுபேர் சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முருகன் தெய்வானை இணைக்கு குடைவரை கோவில் பார்வையிட்டு பேசுகையில்,மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி
வட்டம் மேலூரில் முருகன் தெய்வானை இணையாக உள்ள குடைவரை கோவிலினை தமிழ்நாடு அரசு,தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாகபாதுகாத்து வருகிறது.
மதுரை ஆனைமலையின் வடக்குச் சரிவில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கி.பி.768) குடைவிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ள நரசிம்மப் பெருமாள் கோயிலை அடுத்து லாடன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள முனிவர் சிற்பம் ஒன்றுக்கு லாட முனிவர் என்று பெயர் கொடுத்து இக்கோயிலை லாடன் கோயில் என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்குடைவரை கோயில் முற்கால பாண்டியர காலத்தியது ஆகும்.
இது முருகப்பெருமானுக்காக குடைவிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இக்குடைவரை சதுரமான சிறய கருவறையும், நீள் சதுர முகமண்டபத்தையும் உடையது. முகமண்டபத்தை இரு தூண்கள் அலங்கரிக்கின்றன. கருவறையில் இருகரங்களை உடையவராய் முருகப் பெருமான் அமர்ந்திருக்க அவர் அமர்ந்துள்ள நீண்ட இருக்கையிலேயே அவரது இடதுபுறம் தெய்வானை அமர்ந்து உள்ளார்.
கருவறையின் வாயிலின் இருபுறம் சேவலும் மயிலும் கொடிக்கம்பங்களின் மீது செதுக்கப்பட்டுள்ளது. கருவறை வாயிலின் இருபுறமும் ஆடையுடனும், கௌபீனத்துடனும் இரு முனிவர்கள் கைகளில் மலர் கொத்துகளுடன் விளங்குகின்றனர்.
முகமண்டபத்தின் ஒருபுறம் சிதைந்த ஒரு விலங்கின் உருவமும், மறுபுறம் மன்னனை ஒத்த உருவம் கையை உயர்த்தி மண்டியிட்டு வணங்கும் நிலையில் சிற்பங்களாக உள்ளன. இவ்விடத்தில் ஒரு பாறைச் சுவரில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இதன் காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டாகும் என்றனர்.