மரக்காணம், செங்கல்பட்டு பகுதிகளில் விஷ சாராயம் அருந்திய சம்பவத்தில் 23 பேர் இறந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மற்றும் பிற மாநில மது பாட்டில்கள் நடமாட்டத்தை கண்காணித்து தடை செய்ய வேண்டுமென காவல்துறைக்கும் மதுவிலக்கு போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடத்தப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்களை தடுக்க புதுவை தமிழக பகுதியான மொரட்டாண்டி, கிளியனூர், கோட்டக்குப்பம், கீழ்புத்துப்பட்டு, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து வருவாய்துறை அதிகாரிகளும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மொரட்டாண்டி டோல்கேட் மதுவிலக்கு சோதனை சாவடியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவையிலிருந்து ஆந்திர மாநிலம் பதிவு எண் கொண் தனியார் பஸ்சில் வந்த ஒரே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அந்தப் பஸ்சில் போலீசார் சோதனை செய்தனர். பஸ்சின் மேல் கூரையிலும் சென்று போலீசார் உடைமைகளை சோதனை செய்ததில் 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ஒரு சாக்கு நிறைய மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பஸ்சின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த சோதனையால் மொரட்டாண்டி மதுவிலக்கு சோதனை சாவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *