எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டநாதர் என்று அழைக்கப்படும் திருநிலைடனாகிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சியளிக்கும் கோயில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு எட்டு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை ஏழாம் காலை யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சரியாக 3.50 மணி அளவில் சீர்காழி சட்டநாதர் ஆலயம் செல்வதற்கு சாலை மார்க்கமாக காரில் வந்தார். அரசூர் ரவுண்டானா பகுதியை ஆளுநர் ரவி காரில் கடந்தார்.
அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன் மாவட்ட துணை செயலாளர் குமரேசன் தலைமையில் மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜய் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் சீர்காழி ஒன்றிய செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன் ஆகியோர் கருப்புக்கொடி காட்டி முழக்கமிட்டனர்.
ஆளுநர் ஆர்என் ரவியை திரும்பி போக வலியுறுத்தினர். உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து டாட்டா ஏசியில் எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.