தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நகர் 2-வது தெருவில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் பூக்குழி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பூக்குழி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள கொடிமரத்தில் காலை 4.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடியேற்று விழாவில் செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சங்கர சுப்பிரமணியன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி, திமுக மாவட்ட இளைஞரணி சரவணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா 10ம் திருநாளான வருகிற ஜுன் 9-ம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தினர் செய்து வருகின்றனர்.