அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் வேளாண்மைத்துறை சார்பில் சாத்தையாறு உபவடி நிலப்பகுதி பரளி கிராமத்தில் நெற்பயிரில் திருந்திய நெல் சாகுபடி பயிர் மேலாண்மை முறைகள் குறித்த உழவர் வயல்வெளிப்பள்ளி நடைபெற்றது. இந்த உழவர் வயல்வெளிப் பள்ளியில் 25 நெல் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இராமசாமி திருந்திய நெல் சாகுபடி உழவர் வயல்வெளிப்பள்ளி பயிற்சியின் ஆறு வகுப்புகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கி அனைவரையும் வரவேற்றார். கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரி பேராசிரியர் டாக்டர். தெய்வசிகாமணி திருந்திய நெல் சாகுபடியில் முதல் கட்டமாக நெல் இரகம், பருவநிலை, விதை நேர்த்தி மற்றும் நாற்றாங்கால் தயாரித்தல் பற்றியும் தொழில்நுட்பங்கள் பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
உழவர் வயல்வெளிப் பள்ளியில் வேளாண்மை அலுவலர் வசந்தகுமார் வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படும் இடுபொருட்கள் பற்றியும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஷ் பயிர் காப்பீடு முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
வயல்வெளிப்பள்ளிக்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப அலுவலர்கள் வேல்முருகன், சௌந்தரராஜன், வசந்தி, மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்கள் கீதப்பிரியா, அபினேஷ் ஆகியோர் மேற்கொண்டனர்.