பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ( தெற்கு ) வட கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா நாட்டிற்கு கல்வி பயணம் மேற்கொள்ளும் மாணவருக்கு வழி அனுப்பும் விழா நடைபெற்றது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணரும் வகையில் கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் அறிவியல் கண்காட்சி போட்டியில் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் நித்திஷ் குமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று
தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவனுக்கு தமிழக அரசால் அயல்நாடு கல்வி பயணம் திட்டத்தின் கீழ் வடகிழக்கு ஆசிய நாடான தென்கொரியா நாட்டிற்கு கல்வி பயணம் இம்மாதம் 6 தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளார். இந்த மாணவனுக்கு பாராட்டு விழா மற்றும் வழியனுப்பு விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் இராசாத்தி தலைமையேற்று வாழ்த்தி பேசினார்.
இதில் வட்டார கல்வி அலுவலர் மதலைராஜ் முன்னிலை வகித்தார் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன் ஜெயங்கொண்டம் பரப்பிரம்ம பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமார், உட்கோட்டை பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர் நித்திஷ்குமார் வழிகாட்டி ஆசிரியர் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோரை வாழ்த்தி பேசினார்கள்.
முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார்.
கங்கைகொண்ட சோழபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் நித்திஷ் குமாரின் பெற்றோர் கூலி தொழிலாளி என்பதனை அறிந்த ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் , ஜெயங்கொண்டம் தெற்கு கழக செயலாளர் மணிமாறன் ஆகியோர் மாணவர் மற்றும் பெற்றோர்களை நேரில் வரவழைத்து அயல்நாடு செல்லும் மாணவருக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் நிதிஷ்குமார் வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியிலும் , செங்குந்தபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவன் பிரணவ் கார்த்திக் வினாடி வினா போட்டியிலும் வெற்றி பெற்று இருவரும் தென்கொரியா கல்விப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி நன்றி கூறினார்.