குடவாசல் பேரூராட்சி பகுதியில் சுற்றித் திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் 15 வார்டுகள் உள்ளன, குடவாசல் பேருந்து நிறுத்தம் திருவாரூர்- கும்பகோணம் சாலையில் உள்ளது, பேருந்து நிலையத்தை தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் குடவாசல் பேருந்து நிறுத்தம் மற்றும் சாலைகளில் இரவு, பகலாக சுற்றித்திரியும் குதிரைகளால் அடிக்கடி விபத்துகளும் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வீதிகளில் சுற்றித் திரியும் குதிரைகளைப் பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் சார்பாக பேரூராட்சி நிர்வாகத்திலும் மனு அளிக்கப்பட்டது,
அப்போது பேரூராட்சி நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் தற்போது மீண்டும் கடந்த சில மாதங்களாக தெருக்களில் சுற்றி திரியும் குதிரைகளால் முதியோர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனர்.
தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் பெரும் இடைஞ்சலாகவும் விபத்தும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் வகையில், கால்நடைகளை வீதியில் விடும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மாவட்ட கலெக்டரின் உத்தரவு உள்ள நிலையில், இதேபோல் பல இடங்களில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றனர்
ஆகவே உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, குடவாசல் பகுதியில் சுற்றி திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.