செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம்
புதுவையில் சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் எல்லாம் நடக்கும் ஆனால் உள்ளாட்சி தேர்தல் மட்டும் நடக்காது. காரணம் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சேர்மன், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் போன்ற பதவிகள் நிரப்பப்பட்டு அதிகாரம் பரவலாக்கப்படுவதால் சட்டமன்ற உறுப்பினரின் ஆளுமை தன்மைக்கு குறைவு ஏற்படுவதாக கருத்து நிலவுகிறது.
இதனாலேயே புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தாமதம் உள்ளது என்ற கருத்து நிலவுகிறது. மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளில் உள்ளாட்சித் துறைக்கு மிக முக்கியத்துவம் உள்ளது. இதில் நகர்புறங்களில் நகராட்சியும் கிராமப்புறங்களில் கொம்யூன் பஞ்சாயத்தும் அமைக்கப்பட்டு பணிகள் மக்களுக்கு செய்யப்படுகின்றன.
கிராமப்புறங்களில் செயல்படும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் நிர்வாகத் திறமையின்மையால், தங்கள் பணிகளை சிறப்புற செய்யாமல் வளர்ச்சிப் பணிகள் தடைபடுகின்றன குறிப்பாக நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து பல்வேறு அவலங்களில் சிக்கித் தவிக்கிறது. இதுகுறித்து நெட்டப்பாக்கம் தொகுதி மக்கள் கூறுவது என்ன என்பதை காண்போம்.
புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை செயலாளர் எஸ். நாகராஜன் கூறுவதாவது. இந்த நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான திருமண மண்டபம் கரியமாணிக்கத்தில் உள்ளது. இந்த மண்டபத்தில் ஏழை எளிய மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில்செய்து வந்தனர் மிகச் சிறப்பாக இயக்கி வந்த இந்த கரியமாணிக்கம் வெங்கடசுப்பா ரெட்டியார் திருமண மண்டபம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் புனரமைப்பு வேலைகள் வேலைகள் செய்யாத காரணத்தால் வெங்கடசுப்பா ரெட்டியார் திருமண மண்டபம் மக்களுக்கு பயன்படாத நிலைக்கு தள்ளப்பட்டது இதற்கு காரணம் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தின் அலட்சியப் போக்கும் நிர்வாக திறமையின்மையுந்தான் காரணம்.கடந்த 26 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத இந்த மண்டபம் அப்படியே உள்ளது.
கொம்யூன் பஞ்சாயத்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஆனால் ஆட்சியாளர்கள் மாறினார்கள் மண்டபத்தின் நிலைமை மாறவில்லை இதனால் ஏழை எளிய மக்கள் மிக அதிக செலவில் தனியார் திருமண மண்டபங்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்
மேலும் இந்த நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து பல இடங்களில் கடைகளை கட்டி பூட்டிய நிலையில் வைத்துள்ளது. இதனால் கொம்யூன் பஞ்சாயத்துக்கு வர வேண்டிய வருவாய் தடைபட்டுள்ளது. இப்படி அலட்சிய போக்கால் வருவாய் இழப்புகள் ஏற்படுத்தும் கொம்யூன் பஞ்சாயத்து நடவடிக்கைக்கு எங்கள் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் நாங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
மேலும் கரியமாணிக்கம் சந்திப்பு, நெட்டப்பாக்கம் சந்திப்பு, மடுகரை பஸ் நிலையம் போன்ற இடங்களில் பயணிகள் தங்குவதற்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை நினைவுபடுத்துகிறோம் இவ்வாறு புதிய மாநில புரட்சி பாரதம் கட்சியின் துணைச் செயலாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்
தொழிலதிபர் பு.கங்காதரன் கூறுவதாவது…
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் முன்பு ஆணையராக பொறுப்பேற்று இருந்த ஜெயக்குமார் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு மக்களிடம் நல்ல மதிப்பையும் பெயரையும் பெற்றிருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புஅவர் மாற்றலாகி சென்ற பிறகு அந்த இடத்திற்கு வந்த ஆணையர் ரமேஷ் கொம்யூன் பஞ்சாயத்திற்கு வருவதும் போவதும் தெரியவில்லை. எப்போது கொம்யூன் பஞ்சாயத்துக்கு சென்றாலும் அவர் இருப்பதில்லை. நெட்டப்பாக்கம் தட்டான் குளம் பகுதியில் உள்ள புனிதவதி நகருக்கு கடந்த 26 ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியசாமி விஜயவேணி தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள ராஜவேல் புனிதவதி நகருக்கு சாலை வசதி ஏற்படுத்தாதது பொதுமக்களிடத்தில் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் இந்த சாலை விஷயத்தில் நடவடிக்கை மேற்கொள்ளுவாரா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு தொழிலதிபர் பு. கங்காதரன் தெரிவித்துள்ளார்.