தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில்
டோல்கேட் அகற்றப்படுமா? கேள்வி;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாறாந்தையில் நான்கு வழி சாலை பணிக்காக அமைக்கப்பட்டு வரும் டோல்கேட் அகற்றப்படுமா என்று சட்டப்பேரவையில் ஆலங்குளம் எம்எல்ஏ பி.ஹெச் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர்
பி ஹெச் மனோஜ் பாண்டியன் மாறாந்தை சுங்கச்சாவடி தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கேள்வி நேரத்தில் – தென்காசி திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகின்றது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை ஓஎம்ஆரில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்தது போல மாறாந்தையில் வியாபாரிகள் பொது மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் சுங்கச்சாவடி அமைப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில்- திருநெல்வேலி தென்காசி நான்கு வழி சாலை பணி என்பது 46 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ரூபாய்.431 கோடி மதிப்பில் உலக வங்கி உதவியுடன் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியை ரத்து செய்தது போல மாறாந்தை சுங்கச்சாவடியை முதலமைச்சர் ரத்து செய்வாரா என்று கேள்வி எழுப்பினார். சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி மாநில அரசு நிதியின் மூலம் அமைக்கப்பட்ட காரணத்தால் அந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தினார் தமிழக முதல்வர் என்று குறிப்பிட்டார். ஆனால் திருநெல்வேலி தென்காசி நான்கு வழி சாலை ரூபாய். 431 கோடி மதிப்பில் உலக வங்கியின் உதவியுடன் பணி நடைபெற்று வருகின்றது.
அதிமுக ஆட்சிகாலத்தில் உலக வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டு தமிழகத்திற்கு கடன் கொடுங்கள் நாங்கள் சுங்கச்சாவடி அமைத்து கடனை திரும்ப கட்டிவிடுகிறோம் என்று கூறி ஒப்பந்தத்தில் கையொப்ப மிடப்பட்டுள்ளது.
மாறாந்தை டோல்கேட் விவகாரத்தை உலக வங்கியுடன் பேசித்தான் முடிவு எடுக்க முடியும்.
இதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உலக வங்கியுடன் பேசி ஒப்புதல் கொடுத்தால் மாறாந்தை சுங்கச்சாவடி வசூலை நிறுத்த முடியும். மாநில நிதி நிலைமை உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால் உலக வங்கியுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ, வேலு கூறினார்.