எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்க ஆர்வமாய் வந்த பொதுமக்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கிய அதிமுக நிர்வாகிகள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மார்கோனி கார்டனில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76-வது பிறந்தநாளையொட்டி பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.
கோலப்போட்டிக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தநடராஜன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ என்.சந்திரமோகன், பொறியாளர் இ.மார்கோனி, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்று பல்வேறு விதமான வண்ண கோலங்கள், ரங்கோலி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவம், சாதனைகளை கூறும் கோலங்களை வரைந்தனர்.
கோலப்போட்டியில் பங்கேற்ற மனைவிகளுக்கு துணைக்கு வந்திருந்த அவர்களது கணவர்கள் உதவிபுரிந்தனர். இதில் முதல் மூன்று பரிசுகளுக்கு உரிய கோலங்கள் தேர்வு செய்யப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.