வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடைக் காவடி திருவிழா நடைபெற்றது, இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் சக்தி தலங்களில் ஒன்றாகும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவர். ஆவணி கடை ஞாயிறன்று ஆலயத்துக்கு அருகிலுள்ள புனித குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். மேலும் இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இத்திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பால் காவடி, பாடைக்காவடி அலகு காவடி, தொட்டில் காவடி, பால்குடம் உள்ளிட்டவை எடுத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். மிகுந்த நோய்வாய்ப்பட்டு குணம் அடைந்தவர்கள் இறந்தவர்களை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்து சொல்வதைப் போன்று பாடைக்காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்வார்கள்.
மாநிலத்தில் எங்கும் நடைபெறாத வகையில் பாடைக்காவடி திருவிழா வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பாடைக்காவடி திருவிழா கடந்த எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா உடன் துவங்கியது. கடந்த பத்தாம் தேதி முதல் காப்பு தட்டும் நிகழ்ச்சியும், பதினேழாம் தேதி இரண்டாவது காப்பு கட்டு நிகழ்ச்சியும் நடைபெற்று, தொடர்ந்து அம்மன் தினசரி பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும், இரவு ஆலய வளாகத்தில் தினந்தோறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா நேற்று நடைபெற்றது. அதிகாலை அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று முன் தினம் நள்ளிரவு முதல், நேற்று நள்ளிரவு வரை பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக பல்வேறு காவடிகளை எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
மாலை நாலு மணி அளவில் அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா காட்சியும், இரவு ஏழு மணி அளவில் ஆலயத்தில் செடில் சுற்றும் விழாவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மிகப் பிரம்மாண்டமான வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு பத்து மணி அளவில் உத்தமதாணி மதிவாணன் நாடக மன்றம் எம்.மணிவேல் குழுவினரின் வள்ளி திருமணம் என்னும் புராண நாடகம் நடைபெற்றது.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் நலன் கருதி தற்காலிக நிழல்கூரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும்முன்னதாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது, மேலும் பொதுமக்கள் நலன் கருதி ஆலயத்தின் எதிரே உள்ள பொது சுகாதார வளாகம் புனரமைக்கப்பட்டு உள்ளது.
ஆலயத்தின் எதிர்ப்புறம் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சுகாதார நிலையம் செயல்பட்டது. காவல்துறையின் சார்பில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர் தங்கள் வாகனத்தைஆலயத்தின் எதிர்ப்புறம் நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் ஆலயத்தை சுற்றி 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிகளை நேரடியாக அம்மாபேட்டை புலவர் பன்னீர் செல்வம் நேர்முக வர்ணனைசெய்தார். வருகின்ற 31 ஆம் தேதி புஷ்ப பல்லக்கு விழாவும், ஏப்ரல் ஏழாம் தேதி பங்குனி கடை ஞாயிறு விழாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், வரதராஜன்பேட்டை தெருவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.