மதுரையில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுகுளியலறையில் மயங்கி விழுந்ததாக நாடகமாடிய ராணுவ வீரர் (பெரியப்பா) செந்தில்குமார் மற்றும் உடந்தையாக இருந்த பெரியம்மா இருவரும் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று உடலை கால்வாயில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோன்று மதுரையிலும் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கூடல்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனையூர் (கருப்பசாமி நகர் காலாங்கரை) பொதிகை நகர் 1 வது தெருவை சேர்ந்த 11 வயது சிறுமி, அங்குள்ள கோசாகுளம் பள்ளியில் 5-ம் – வகுப்பு படித்து வந்தாள். இவள் 6 மாத குழந்தையாக இருக்கும் போது அவளது தாய் இறந்து விட்டார். இதனால் அவரது தந்தை வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் சிறுமி மற்றும் சிறுமியின் அண்ணனை பெரியம்மா எடுத்து வளர்த்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் அண்ணன் கண்மாயில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இறந்து விட்டார். இதனை தொடர்ந்து,
சிறுமியை மட்டும் பெரியம்மா வளர்த்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று மாலையில் சிறுமி குளிப்பதற்காக வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்ற போது பல மணி நேரம் ஆகியும் வெளியே வரவில்லை என சிறுமியின் பெரியப்பா, பெரியம்மா
அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு சிறுமி மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். உடனே சிறுமியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சிறுமியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சிறுமியின் கழுத்தில் காயம் இருப்பதாக தகவல் வெளியானது இதனை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில், சிறுமியின் பெரியம்மா மற்றும் பெரியப்பா ஆகியோரை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியை ராணுவ வீரர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் பெரியப்பா மற்றும் பெரியம்மா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின்
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்திய ராணுவத்தில் தற்போது உயர் பதவியில் இருந்துவரும் பெரியப்பா செந்தில்குமார் சம்பவத்தன்று
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது சத்தம் போட்டு கத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் அங்கு இருந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி வளர்ப்பு மகள் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்துள்ளார். பின்னர் இருவரும் சிறுமியின் உடலை கழிவறைக்குள் போட்டுவிட்டு தண்ணீர் குழாயை திறந்துவிட்டு கதவை மூடிவிட்டு தெரியாதது போல் அக்கம் பக்கத்தினரிடம் சென்று நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. இருவரிடமும் நடத்திய தொடர் விசாரணையில் அவர்கள் சிறுமியை பாலியல் பலாதகாரம் செய்து கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. என கூறினர்.