தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் கிராமத்தில் சினையுறா மாடுகளுக்கு சிறப்பு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சிம்சன் தலைமையில் நடைப்பெற்றது. திருநெல்வேலி கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநர் டாக்டர் தியோபிலஸ் ரோஜர் மற்றும் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் ஜான் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்து முகாமினை துவக்கி வைத்தனர்.
முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பிடிக்காத மற்றும் நீண்ட காலம் பருவத்திற்கு வராத மாடுகளுக்கு சினைப்பருவ ஒருங்கிணைப்பு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கைமுறை கருவூட்டல், மடிவீக்க நோய் மேலாண்மை, தாது உப்பு கலவை வழங்குதல், கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாதுஉப்பு கட்டிகள் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை தென்காசி கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் மகேஷ்வரி அறிவுரையின் பேரில் மாறாந்தை கால்நடை உதவி மருத்துவர் ராமசெல்வம், கால்நடை ஆய்வாளர் மகேஷ் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பிச்சையா ஆகியோர் செய்திருந்தனர்.