உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு
புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட நிக்கோல் துரியோ குடியிருப்பு, துப்ராயப்பேட்டை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மனைப்பட்டா கோரிக்கை போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு மனைப்பட்டா பெற்றுத் தந்த உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், அடுத்த கட்டமாக அவர்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தனது அலுவலகத்தில் பயனாளிகளுக்கு வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “மனைப்பட்டா பெற்றுக் கொடுத்ததுடன் மட்டுமல்லாமல், அனைவரும் சொந்த வீடு கட்டி குடியேறும் வரை தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து தருவேன்” என உறுதி அளித்தார்.
விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட பயனாளிகள், நீண்ட ஆண்டுகளாக நீடித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க காரணமான சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.