எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் , பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், பாரம்பரிய விதைகள், பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள், பாரம்பரிய உணவு வகைகள், மருந்து தெளித்தல் வேளாண் கருவிகள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள் , பழங்கள் ஆகியவையும் பாரம்பரிய தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் பாரம்பரிய பயிர் ரகங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்? மதிப்பு கூட்டுதல் மற்றும் ஊட்டச்சத்து ரகங்கள் விற்பனை வாய்ப்புகள் ஆகியவை குறித்தும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம், தோட்டக்கலை பயிர்கள், சாகுபடி பஞ்சகவ்வியம், பூச்சி விரட்டி தயாரிப்பு ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பாரம்பரிய அரிசி வகைகளில் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டது.