கோவை கணபதி,மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில், திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது.
இந்நிலையில்,இக்கோவில் வளாகத்தில் தமிழ் கடவுளாம் ஆறு முக வேலவ பெருமானுக்கு தனி கருவறை அமைக்கப்பட்டு,முருகனுக்கு உகந்த நாளான வைகாசி திங்களன்று திருநெறிய திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்குட நீராட்டு பெருவிழாவை முன்னிட்டு 108 தீர்த்த குடங்கள் ஊர்வலம், கவுமார மடாலயம் சிரவை ஆதீன அருட்பணி மன்றத்தினர் முன்னின்று நடத்திய இரண்டு கால வேள்வி வழிபாடு கடந்த இரு நாட்களாக நடைபெற்றது.. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக,சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டு,திருக்குடங்கள் கோயிலை வலம் வந்து விமான கலசத்திற்கு எடுத்து சென்று புனித நீர் ஊற்றப்பட்டது…விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னால் மேயர் செ.ம.வேலுசாமி,முன்னால் எம்.பி.நாகராஜன்,தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கோவை கணபதி மணியகாரம்பாளையம்,ராக்காட்சி கார்டன்,பிருந்தாவன் நகர்,ரங்கா நகர்,எல்.கே.ஜி.நகர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ராம்குமார்,சுப்ரமணியம்,செந்தில்குமார்,திலக்ராஜா,ரங்கராஜ்,ராமச்சந்திரன், சீனிவாசன்,சண்முகம்,சோமசுந்தரம்,மனோஜ் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.