நாகப்பட்டினம், ஜூலை 8:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கூரத்தாங்குடி ஊராட்சி, நாகலூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் எஸ்.கே. விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வலிவலம் ஊராட்சி காருக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியிலிருந்து விலகிய 20-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அவர்களை கட்சியினர் வரவேற்று உறுப்பினர் சேர்க்கை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி இணை அமைப்பாளர் பி. நாகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் கே.ஜே. ஜெயசீலன், வலிவலம் ஊராட்சி செயலாளர் மனோஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, எதிர்கால பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், கூரத்தாங்குடி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாட்டிற்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கியுள்ளனர். தற்போது அப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.