தேனி, ஜூலை 8: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகராஜன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரஜத்பீடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம், அவற்றின் செயல்பாடு மற்றும் பொதுமக்களுக்கு திட்டங்களின் பயன்கள் முழுமையாகச் சென்றடைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து ஆலோசிக்கப்பட்டது.