அலங்காநல்லூர்,
மதுரைமாவட்டம்,அலங்காநல்லூர், அருகே உள்ள அ.புதுப்பட்டியில் கிராமத்தில் அமைந்துள்ள பாலமரத்தம்மன் – சுந்தரவள்ளி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு விழா நேற்று முன்தினம் காலையில் அரசு வழிகாட்டுதல்படி தொடங்கியது, இதில் வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுகிபிரேமலா, மற்றும் வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கிராம கோவில் மாடுகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் சீறி பாய்ந்து வந்த முரட்டு காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்தனர்.
பல காளைகள் ,வீரர்களின் பிடியில் சிக்காமல் சவால் விட்டு சிட்டு போல் பறந்து சென்றன. வாடிவாசல் முன்பாக, வீரர்களுக்கும், காளைகளுக்கும் பாதுகாப்பாக தென்னை நார் மஞ்சிகள் விரிக்கப்பட்டிருந்தன. இந்த ஜல்லிக்கட்டு விழாவைக் காண சுற்றுவட்டாரங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கலந்து கொண்டு விழாவை பார்த்து ரசித்தனர். இது போக மைதானத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த காலரிகளில் பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து பார்த்து ரசித்தனர்’.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, உள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் சுமார் 900 காளைகள், முதல் நாளே, வேன், லாரி, மூலம் வந்து கலந்து கொண்டன.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகே, காளைகளக்கும், மாடுபிடிவீரர்களுக்கும் பந்தயத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது,
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், தங்கம், வெள்ளி காசுகளும், மிக்சி, மின்விசிறி, டிவி, வாசிங் மிஷன், குக்கர்,சில்வர், பித்தளை பாத்திரங்கள், சைக்கிள், பிளாஸ்டிக் சேர்,சுமை பை, உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 3.30 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது .இதில் மாடு முட்டி 13 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அலங்காநல்லூர்,அய்யங்கோட்டை அரசுமருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக வலசை பெரிய மொண்டி (22) அரியூர் கோபி (20) பாலமேடு அன்புராஜ் (25) அவனியாபுரம் விஜய் (21) ஆகிய 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் அலங்காநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் உள்ளிட்ட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் இந்த ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை அ.புதுப்பட்டி கிராம பொது மக்கள் செய்திருந்தனர்..