மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூர் மதங்கீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சுற்றியுள்ள 12 சிவபெருமான் கோயில்களில் இருந்து சிவபெருமான்கள் அம்பிகைகளுடன் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தரும் விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. விழா நடத்திட நாங்கூர் கிராமத்தில் இரு தரப்பினர் அனுமதி கோரினர். இதனால் விழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூட என்பதால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. கோயில் செயல் அலுவலர் முருகன், திருவெண்காடு காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினர் இடையே காவல்துறை முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் காவல் ஆய்வாளர் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை தொடர்ந்தது. அப்போது இரு தரப்பும் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இன்றி விழாவினை நடத்திட ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.