தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு துறைகளின் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், அவர்களது சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான சாதனங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். இந்தியாவில் 11 மாநிலங்களில் தான் தூய்மை பணியாளர் ஆணையம் உள்ளது. புதுச்சேரியில் தூய்மை பணியாளர் ஆணையம் தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஒப்பந்தமுறை ஒழிப்பு துப்புரவு பணியாளர் இரவு நேரங்களில் சாலையோரம் படுத்து தூங்குவதைத் தவிர்க்கவும், அவர்கள் உடைகள் மாற்றவும் திருமண மண்டபங்களை ஏற்பாடு செய்து தருவதாக ஆட்சியர் கூறியுள்ளார். இந்தியாவில் துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.9 ஆயிரம் புதுச்சேரியில் தான் தரப்படுகிறது. தூய்மை பணியில் ஒப்பந்த முறைகளை ஒழிக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக பணம் வழங்க வேண்டும். ஒருசில மாநிலங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. புதுவையிலும் அதை கொண்டு வந்தால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முழு சம்பளமும் சேரும். தமிழகம் முதலிடம் தூய்மைப் பணியின்போது கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பது தொடர்கிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகமே முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் மராட்டியம் இருக்கிறது. கடந்த 1993-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தமிழகத்தில் கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 400 பேர் இறந்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ஜிப்மரில் ஆய்வு முன்னதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளர்களிடம் முறையான ஊதியம் வழங்கப்படுகிறதா? ஊதியத்தில் யாரோனும் கமிஷன் கேட்கிறார்களா? பாதுகாப்பு உள்ளதா? விடுமுறை வழங்கப்படுகிறதா? என்று கேட்டார். இந்த ஆய்வின்போது ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.