பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 20, 21-ந் தேதிகளில் நடத்த இருக்கும் வேளாண் உதவி இயக்குனர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க எம்.எஸ்சி (வேளாண் விரிவாக்கம்), எம்.எஸ்சி (வேளாண் பொருளாதாரம்) ஆகிய படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பாதிக்கப்பட்ட மற்ற வேளாண் முது அறிவியல் பட்டதாரிகள் 7 பேர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இது வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். வரும் 20, 21-ந் தேதிகளில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள 3 பணிகளுக்கான தேர்வுகளில், வேளாண் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வை மட்டும் ஒத்திவைக்க வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி தகுதியான அனைவரிடமும் விண்ணப்பங்களைப் பெற்று, புதிதாக விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்காக படிக்க போதிய காலக்கெடு வழங்கி தேர்வை நடத்த தேர்வாணையம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் எனப்படும் சி.ஐ.எஸ்.சி.இ. அமைப்பு, கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 29-ந்தேதி வரை ஐ.சி.எஸ்.இ. படிப்புக்கான இறுதி தேர்வை நடத்தியது. தொடர்ந்து ஐ.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகள் பிப்ரவரி 13-ந்தேதி தொடங்கி மார்ச் 31-ந்தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளில் மொத்தம் 2.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன.