அலங்காநல்லூர்
தமிழ்நாடு சட்டப்பேரவை 2022-2023 மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 24ன் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட இதர மாநிலங்கள் மற்றும் இதர நாடுகளில் உள்ள திருக்கோவிலுக்கும் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கும் இடையே நல்லிணக்க உறவை மேம்படுத்த வஸ்திர மரியாதை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மதுரையை அடுத்த அழகர்கோவில், கள்ளழகர் கோவிலில் இருந்து மலேசியா நாட்டின் சிலாங்கூரில் அமைந்துள்ள கிளாங் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பாடு ஆகிறது. திருக்கோவில் உதவி ஆணையர் செயல் அலுவலர் ராமசாமி, திருக்கோவில் அர்ச்சகர் மற்றும் அலுவலக பணியாளர்கள் இதனை கொண்டு செல்கின்றனர்.
முன்னதாக திருக்கோயிலில் மேளதாளம் முழங்க சிறப்பு பூஜை செய்து வஸ்திர மரியாதை புறப்படு ஆனது. தமிழகத்தில் மொத்தம் நான்கு கோயில்களில் இருந்து இந்த வஸ்திர மரியாதை வெளிநாட்டிற்கு செல்கிறது. அதில் மதுரையில் மட்டும் இரண்டு கோவில்களில் இருந்து வஸ்திர மரியாதை வெளிநாட்டிற்கு செல்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் சுந்தராஜ பெருமாள் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை புறப்பாடு ஆகிறது.