புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகேஸ்வரி ( 57). இவர்களது மகன்கள் நவீன்(வயது34), விவேக்(32). மகன்களுக்கு 30 வயதுக்குமேல் ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மன வருத்தத்தில் இருந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விரைவில் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நாகேஸ்வரி அடிக்கடி தனது கணவரிடம் கூறி வந்தார். வழக்கம்போல் நேற்று காலையும் மகன்களின் திருமணம் தொடர்பாக நாகேஸ்வரி கணவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனை கணவர் அசோகன் கண்டித்ததாக தெரிகிறது. ஏற்கனவே மகன்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்று மனவேதனையில் இருந்த நாகேஸ்வரி திடீரென சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல்கருகிய நாகேஸ்வரி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை நாகேஸ்வரியின் இறுதி சடங்குநடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது 2-வது மகன் விவேக் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர். எனினும் தாயின் இழப்பை விவேக்கால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்த விவேக் திடீரென எழுந்து மண்ணெண்ணை கேனுடன் காசிமேடு பகுதியில் உள்ள நாகூர் தோட்டம் பகுதிக்கு சென்றார். அங்குள்ள காலி இடத்தில் அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விவேக்கின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விவேக் தனது தாய் நாகேஸ்வரி மீது அதிக பாசம் வைத்து இருந்தார். நேற்றுமதியம் தாய் தீக்குளித்தபோது வீட்டில் இருந்த விவேக் பார்த்து கதறி துடித்து உள்ளார். இதனால் தாயின் நினைவில் அவர் மனவேதனையில் இருந்து உள்ளார். இந்நிலையில் இன்று காலை விவேக்கும் தீக்குளித்து தற்கொலை செய்துவிட்டார். இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். தாய்-மகன் அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *