கோவை சாய்பாபா காலனி பகுதியில் உணவகம் நடத்தி வருபவர் அண்ணாதுரை. இவர் பா.ஜ.க வில் உள்ளாட்சி மேம்பாட்டு துறை மாநில செயலாளராக இருந்து வருகின்றார்.
இவரை
கடந்த 21 ம் தேதி கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால் நீக்குவதாக அக்கட்சி தலைமை அறிவித்து இருந்தது. இந்நிலையில் அண்ணாதுரை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் தனது உணவகத்தில் இருந்த பொருட்களை பாஜகவினர் அகற்றி விட்டு சேவை மையம் என போர்டு வைத்து இருப்பதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பா.ஜ.கவில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவில் மாநிலச் செயலாளராக இருக்கிறேன் எனவும் இனிமேல் அந்த பொறுப்பில் இருப்பேனா என தெரியாது என தெரிவித்தார்.
சென்னை, பாண்டிச்சேரி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று இடங்களில் உணவகம் வைத்துள்ளேன் என தெரிவித்த அவர் கோவையில் எனக்கும் உணவகத்தின் கட்டிடத்தின் உரிமையாளருக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என தெரிவித்தார்.
இந்நிலையில் பா.ஜ.க கட்சியில் இருப்பதால் வீட்டின் உரிமையாளர்,பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து முறையிட்டு இருக்கிறார் எனவும், இதனையடுத்து மாநில தலைவர் அண்ணாமலை கோவை மாவட்ட பா.ஜ.க தலைவருக்கு போன் செய்து கட்டிடத்தில் இருக்கும் பொருட்களை அகற்ற சொல்லி இருக்கிறார் எனவும், இதனையடுத்து மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தலைமையில் கட்சி நிர்வாகிகள் உணவகத்திறகுள் நுழைந்து பொருட்களை திருடி விட்டு, அந்த கட்டிடத்தில் பாஜக கொடியை நட்டு வைத்து, அதில் போர்டு வைத்து அதற்கு சேவை மையம் என்று பெயர் வைத்திருக்கின்றனர் என தெரிவித்தார்.
இப்படி சேவை செய்வார்கள் என தெரிந்திருந்தால் அந்த கட்சிக்கு சென்றிருக்க கூட மாட்டேன் என தெரிவித்த அவர், என்ன நடந்தது என்பதை என்னை அழைத்து விசாரிக்காமல் கடையை காலி செய்து இருப்பதாகவும், இப்பொழுது குண்டர்களை வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் எனவும் அண்ணாதுரை தெரிவித்தார். வேறு வழி இல்லாமல் இப்பொழுது காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன் எனவும் , உணவகத்தின் உள்ளே இருக்கும் குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் , மாநில தலைவர் அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.நீதிமன்றத்தில் எனக்கும் கட்டிட உரிமையாளருக்கும் இடையே வழக்கு இருக்கும் பொழுது, அதற்குள் நுழைந்து எப்படி என்னுடைய பொருள்களை எடுத்துச் செல்ல முடியும் எனவும் என கூறிய அவர், இந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் நேரடியாக தலையிட்டு இருக்கிறார் , அவர் மீதுதான் புகாரை கொடுத்திருக்கிறேன் என தெரிவித்த அவர், அண்ணாமலை மீதும், மாவட்ட தலைவர் பாலாஜி மீதும் அவருடன் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அண்ணாமலை உத்தரவின் பேரிலேயே இது நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் மாநில நிர்வாகியே புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.