கலைவாணர் !
கவிஞர் இரா. இரவி
நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்
நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் !

வாரி வாரி வழங்குவதில் கலைவாணர்
வள்ளல் பாரி ஓரி வரிசையில் நின்றவர் !

கர்ணனுக்கு இணையான வள்ளல் கலைவாணர்
கஞ்சத்தனம் என்னவென்று வாழ்வில் அறியாதவர் !

எதுவும் பணம் இல்லாத நேரத்திலும்
ஏழைக்கு வெள்ளி வெற்றிலைப் பெட்டியைத் தந்தவர் !

நாட்டிய பேரொளி பத்மினி நடிகையை
நாடு போற்றிட அறிமுகம் செய்தவர் !

உடுமலை நாராயணக் கவி அவர்கள்
உலகம் அறிந்திடம் காரணம் ஆனவர் !

நாடகங்களில் சோடா விற்று வந்தவர்
நாடறிந்த நகைச்சுவைக் கலைஞராக உயர்ந்தவர் !

வில்லுப்பாட்டில் கலைப்பயணம் தொடங்கியவர்
விண்ணை முட்டும் புகழினைப் பெற்றவர் !

சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தவர்
சிரிப்பின் வகைகளைப் பாட்டால் உணர்த்தியவர் !

காந்தியடிகளை நேசித்தவர் சொந்தப் பணத்தில்
காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பிய இனியவர் !

பகுத்தறிவுக் கருத்துக்களை வசனங்களில் விதைத்தவர்
பார்போற்றும் நகைச்சுவைக் கலைஞராக உயர்ந்தவர் !

நகைச்சுவை வசனங்கள் சொந்தமாக எழுதியவர்
நகைச்சுவையை ரசிக்கும்படி தரமாக வழங்கியவர் !

நாகர்கோவில் ஒழுகினசேரி எனும் கிராமத்திற்கு
நாடறிந்த புகழைத் தேடித் தந்தவர் கலைவாணர் !
.
உடலால் உலகை விட்டு மறைந்தாலும்
உன்னத நகைச்சுவையால் வாழ்கிறார் இன்றும் !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *