இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு பெற பி.சி.எம். சான்றிதழ்
அரசாணை வெளியிட்ட முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி அறிவிப்பு
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமிய மார்க்கத்தை தங்களது வாழ்வில் நெறியாக ஏற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்று அளிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்துள்ள முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 22.4.2022, 11.3.2023 மற்றும் 14.2.2024 ஆகிய நாட்களில் சட்டமன்றப் பேரவையிலும், அதே போல் கடந்த 22.9.2022 தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்தும் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியர்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்றிதழ் வழங்க வேண்டியதின் அவசியம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தினேன்.
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த கோரிக்கையை பிப் 14 அன்று வலியுறுத்தி நான் உரையாற்றினேன். இதனை தொடர்ந்து 15.2.2024 அன்று ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் உரையில் எனது கோரிக்கையை குறிப்பிட்டு அதற்கு பதிலளித்த முதலமைச்சர் அவர்கள், சட்டவல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்கள் வைத்துள்ள கோரிக்கை நிறைவேற்றப்படும் என பதிலளித்தார்கள்.
கடந்த 17.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும், இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்று அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதுஇந்த அரசாணையின் உதவியால் தமிழ்நாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்றிதழ் கிடைக்க மாண்புமிகு முதலமைச்சர் வழிவகுத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்த நீதியை இஸ்லாத்தைத் தழுவுவோர் பெறுவதற்கு வழிவகுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.