பாரம்பரிய கலைகளை வளர்க்கும் நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
எழுத்தாளரும் சமூக ஆர்வலர் சந்திர பிரபு கோரிக்கை.
கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக கலைகளை வளர்க்கும் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாக்குழு தலைவரும் சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் எல். சந்திரபிரபு தமிழக முதலமைச்சர்க்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தில் முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு உள்ளது. அதே போல பரதநாட்டியம், வள்ளிக்கும்மி, வாய்ப்பாட்டு, பறையிசை மற்றும் நாட்டியம், இசை தொடர்பான பல்வேறு கலைகளை வளர்ப்பவர்களுக்கு சரியான அங்கீகாரமோ கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடோ இல்லை.
அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வளர்த்து அதை அடுத்த தலைமுறையினருக்கும் தந்துவிட்டு செல்கின்றனர். அவர்கள் வளர்த்த கலை உயிர்ப்போடு இன்றும் உள்ளது. ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரம், சமுதாயத்தில் கிடைப்பதில்லை. ஒருசிலர் கலைமாமணி, பத்மஸ்ரீ போன்ற விருதுகளை பெற்று அங்கீகாரம் பெற்றாலும் அது கலைகளை வளர்த்த பெரும்பான்மையினருக்கு பலன் கொடுப்பதில்லை.
ஆகவே, தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் பல்வேறு சமுதாய சிற்பிகளுக்கு தகுந்த வெகுமதியை கொடுக்கும் விதமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறிய அளவிலான இட ஒதுக்கீட்டையாவது கொடுத்து நலிந்து கொண்டிருக்கும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.