வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நாளை புஷ்பப் பல்லக்கு விழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயம் சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோன்று இவ்வாண்டு கடந்த எட்டாம் தேதி பூச்சொரிதல் விழா உடன் துவங்கி, பத்தாம் தேதி முதல் காப்பு கட்டுதலும், 17 ஆம் தேதி இரண்டாம் காப்பு கட்டுடலுடன், தினசரி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும், இரவு இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று, கடந்த 24 ஆம் தேதி புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாளை(31- ந் தேதி) புஷ்பப் பல்லக்கு விழா நடைபெற உள்ளது.
இதில் திருவிழாவை போன்றே, பல்லக்கு அன்றும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பாடை காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். ஆகையால் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆலய நிர்வாகம் மற்றும் பேரூராட்சி சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதை அடுத்து வருகின்ற ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி பங்குனி கடை ஞாயிறு விழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், வரதராஜன் பேட்டை தெருவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.