வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலைச் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம் ஒன்னாம் தேதி முதல், ஐந்தாம் தேதி வரை சூரிய பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று கடந்த 14ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு அன்று காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று,
அம்மன் மீது சூரிய ஒளி படும் நிலையில் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிர சாதமும், அன்னதானமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். இதுபோன்று ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த சூரிய பூஜை விழாவை வரதராஜன்பேட்டை தெரு சீனி. வேம்பையன், சீனி.கோவிந்தராஜன், வே. குமாரவாசன், கோ. சண்முகசுந்தரம், கோ. பெருமாள் ஆகியோர் தொடர்ந்து பல ஆண்டுகளாக மண்டகப்படியாக செய்து வருகின்றனர். அதேபோன்று இவ்வாண்டு நாளை (18- ஆம் தேதி) ஐந்தாம் நாளோடுமுடிவடைகிறது.
இந்நிகழ்ச்சியில் கடந்த நான்கு நாட்களாக ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.