செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீஸ் விசாரணை.
செங்குன்றம் செய்தியாளர்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஜி.என்.டி.புறவழிச் சாலையில் பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே தனியார் (HDFC) வங்கியின் ஏடிஎம் இயங்கி வருகின்றது. நள்ளிரவில் இந்த ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் கல்லை கொண்டு உடைக்க முயற்சிக்கிறார்.
இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணித்த ஏடிஎம் மையத்தின் பாதுகாப்பு அதிகாரி இது தொடர்பாக செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் செங்குன்றம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார்.
காவலர்களை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து செங்குன்றம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் (40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.