கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவு (AI) விழிப்புணர்வு தளம் “டாக்டர் ஜெம்” அறிமுகம்
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை ஜெம் புற்றுநோய் மையம் சார்பில், புற்றுநோயை எதிர்த்து வெற்றி பெற்ற நோயாளிகளை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியையும், “டாக்டர் ஜெம்” (Dr.GEM) எனும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புற்றுநோய் அறிவுத்தளம் (Cancer Intelligence Platform) அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு புற்றுநோய் தொடர்பான துல்லியமான, அறிவியல் ஆதாரமுள்ள மற்றும் நம்பகமான தகவல்களை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த தளம், நோயாளிகளின் சிகிச்சை புரிதலை மேம்படுத்தி, தகவல் அறிந்த சரியான முடிவுகளை எடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய ஜெம் புற்றுநோய் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் குறித்த தவறான தகவல்கள் நோயாளிகளுக்கு பெரும் சவாலாக உள்ளன. இதனை எதிர்கொள்ள, சரியான அறிவியல் அடிப்படையிலான தகவல்களை தேவையான நேரத்தில் வழங்குவதற்காக “டாக்டர் ஜெம்” உருவாக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளின் நம்பிக்கையையும், சிகிச்சை குறித்த புரிதலையும் அதிகரித்து, தகவல் அறிந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு வழிவகுக்கும், என்றார்.
மேலும், ஜெம் மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் சி. பழனிவேல் கூறுகையில்,
புற்றுநோய் சிகிச்சை இன்று மருத்துவமனைச் சுவர்களுக்குள் மட்டுமல்ல. தொழில்நுட்பம், மனிதநேயம் மற்றும் விழிப்புணர்வு ஒன்றிணையும் போதுதான் உண்மையான மாற்றம் நிகழ்கிறது. “டாக்டர் ஜெம்” போன்ற முயற்சிகள் எதிர்கால புற்றுநோய் பராமரிப்பின் அவசியமான பகுதியாக இருக்கும். நம்பகமான தகவல்களுடன் கூடிய மருத்துவ சிகிச்சையை நோயாளிகள் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் முழுமையான மற்றும் கனிவுடன் கூடிய புற்றுநோய் சேவையின் உறுதிமொழி, என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஏ. சிவதாணு பிள்ளை, இஸ்ரோ விஞ்ஞானி, பிரம்மோஸ் திட்டத்தின் தந்தை மற்றும் திரு. ஏ. சரவண சுந்தர், ஐ.பி.எஸ்., காவல்துறை தலைவர், மேற்குமண்டலம், கோவை
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவர்களின் பங்கேற்பு, புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அறிவியல், தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவை ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் புற்றுநோய் நிபுணர்கள், சுகாதார வல்லுநர்கள், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.