நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை விழிப்புணர்வு முகாம்.
புதுப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்படி காவல் துறை சமூக நீதி மற்றும் மத நல்லிணக்கப் பிரிவின் சார்பில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 18 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அருட்சகோதரி வேளாங்கண்ணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காவல் துறை உதவி – ஆய்வாளர் அமுதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.
அவர் பேசும்போது, போதைப்பொருள்,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும் கல்விச் சலுகைகள் குறித்தும் கைப்பேசி,முகநூல்,புலனக் குழுக்களில் பெண் குழந்தைகள் தங்களது புகைப்படம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்
மேலும் சமூக குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் உடனடியாக புகார் தெரிவிக்க அவசர உதவி எண் 100,பாலியல் குற்றங்கள் தொடர்பாக 1098,சைபர் குற்றங்களுக்கு 1930 போன்ற எண்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். சுமார் 900 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி முடிவில் பள்ளி முதல்வர் ஞான தங்கம் நன்றி கூறினார்.