நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவர்களுக்கான இலவச சித்தர் யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஏராளமான சிறுவர், சிறுமிகள் இவ்வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இதுகுறித்து முனைஞ்சிப்பட்டி அரசு சித்த மருத்துவர் வரதராஜன் கூறியதாவது:-
முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவப்பகுதி சுகாதார மற்றும் நல மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர், சிறுமிகளுக்கான யோகாசன பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
முனைஞ்சிப்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் வந்து பயிற்சி பெறுகின்றனர். மேலும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கு உதவும் கர்ப்பகால யோகாசன பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மேலும் வாழ்வியல் நோய்களான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடற்பருமன் இவற்றை குறைக்கவும், கட்டுக்குள் வைக்கவும் உதவும் சித்தர் யோகா பயிற்சிகள் யோகா பயிற்றுனர் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.
நாங்குநேரி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று உடல்நலனை மேம்படுத்த உதவும் யோகாசன பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.