எனது அம்மாவை யாரிடமும் சலான் பூர்த்தி செய்ய கேட்கவிடமாட்டேன் – நானே பூர்த்தி செய்து கொடுப்பேன் – மாணவர் பேச்சு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாழையூர் பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றனர்.
வங்கியின் கிளை மேலாளர் நாகம்மை தலைமை தாங்கினார் . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.வங்கி அலுவலர் கோவிந்தலிங்கம் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.வங்கியின் செயல்பாடுகள் என்ன,என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.வங்கியில் பொதுமக்கள் பயன்பாடும்,பொதுமக்களுக்கு வங்கியின் சேவை குறித்தும் எடுத்து கூறினார்.வங்கியில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும் படிவம்,காசோலை எடுக்கும் படிவம்,நகை கடன் செலுத்துவது , செலுத்திய பணத்தை எடுப்பது , ஏ டி எம் இயந்திரத்தினை பயன்படுத்துவது எவ்வாறு என்பதை செய்து காண்பித்து விளக்கமாக எடுத்து கூறினார்.எ .டி .எம்.அட்டை தொடர்பாக யார் எந்த தகவல் கேட்டாலும் சொல்ல வேண்டாம் என்று விளக்கி சொன்னார்கள். எ .டி .எம்.அட்டை தொலைந்து போனால் 18001234 மற்றும் 18002100 என்று எண்ணுக்கு தகவல் சொல்லுங்கள்.இவ்வாறு பல்வேறு தகவல்களை விரிவாக விளக்கினார்கள்.வங்கி மேலாளரிடம் மாணவர்கள் சந்தேகங்கள் கேட்டு பதில்கள் பெற்றனர்.மாணவர்களை ஆசிரியை செல்வமீனாள் அழைத்து சென்றார்.
வங்கிக்கு சென்றது தொடர்பாக மாணவர் சந்தோஷ்குமார் கூறும்போது , நான் எனது அம்மாவுடன் நான் முன்பு வங்கிக்கு வந்துள்ளேன்.எனது அம்மாவுக்கு எழுத படிக்க தெரியாது. யாராவது ஒரு அண்ணன் அல்லது அக்காவிடம் சென்று சலான் எழுதி தர சொல்லி கேட்பார்கள்.சமயத்தில் கெஞ்சுவார்கள்.ஆனால் இன்று நான் எப்படி சலான் பூர்த்தி செய்வது என்று கற்றுக்கொண்டேன்.இனி வரும் காலங்களில் எனது அம்மாவுடன் வந்து நானே சலான் பூர்த்தி செய்வேன். மற்றவர்களுக்கும் பூர்த்தி செய்து கொடுப்பேன் என்று பேசினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஏற்பாட்டில் பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றபோது வங்கியின் மேலாளர் நாகம்மை தலைமையில் வங்கி அலுவலர் கோவிந்தலிங்கம் மாணவர்களுக்கு வங்கி தொடர்பாக விரிவாக விளக்கினார்