தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமத்தில் ஐந்து கிராம மக்கள் பயன்படுத்த கூடிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் சிவாடி, செட்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 கிராமக்களுக்கும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் 60 அடி உயரமுள்ள தண்ணீர் தொட்டியில் 3 இளைஞர்கள் மது போதையில் மேலே ஏறி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது மது மற்றும் கஞ்சா அருந்திவிட்டு அதோடு தொட்டியில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து கோபமடைந்த பொதுமக்கள் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர் உடனடியாக அந்த இளைஞர்களை தண்ணீர் டேங்க் மேலிருந்து இறக்கி உள்ளனர். அப்பொழுது அந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் அளித்தனர். இன்று காலை விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் உடனடியாக வெளியேற்றப்பட்டு டேங்க் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. வேங்கை வயல் சம்பவம் போல் எங்கள் கிராமத்திலும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெற்று விடக்கூடாது அதற்காக இது போன்ற மது போதை இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.