மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கடற்கரையில் பிரமாண்ட உருளை ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் நான்கு அடி உயரத்தில், 23 அடி சுற்றளவு கொண்ட வட்ட வடிவில் பைஃபராலான உருளையைக் கண்டு மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கும், பூம்புகார் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். அங்கு விரைந்து சென்ற கடலோர காவல் குழுமத்தினர் மர்ம பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த உருளை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் புவிசார் அறிவியல் அமைச்சகத்திற்கு சொந்தமான கடல் வளம் மற்றும் கடல் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வு செய்வதற்காக கடற்பரப்பில் நிலை நிறுத்தப்பட்டிருந்த ஆய்வு களம் என்பதும்,கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக நிலை தடுமாறி இப்பகுதியில் கரை ஒதுங்கியதும் தெரியவந்தது.இதனையடுத்து சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு கடலோர குழும போலிசார் தகவல் அளித்தனர்.