பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையில் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் தனியார் மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது,

தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம் ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் தனியார் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்ததுடன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெற்று தீர்வு காணப்பட்டது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 177 மனுக்கள் பெறப்பட்டு, 172 மனுக்கள் ஏற்கப்பட்டும், 05 மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 113 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

மேலும் இம்முகாமில், வருவாய்த் துறையின் சார்பில் 73 பயனாளிக்கு ரூ.7.53 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, இணைய வழி பட்டா மாற்றம், நத்தம் பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியத் தொகையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.11,79,000 மதிப்பில் இணைய வழி வீட்டுமனை பட்டாக்களும், 1 பயனாளிக்கு ரூ.5,250 மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டியும், வேளாண்மைத் துறையின் சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.2,795 மதிப்பில் வேளாண் இடுபொருட்களும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.20,000 மதிப்பில் இடுபொருட்களும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.12,55,000 மதிப்பில் வேளாண் கருவிகளும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.22,37,200 மதிப்பில் பயிர் கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 04 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் சுய தொழில் கடன்களும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 03 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 03 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களும் என ஆக மொத்தம் 172 பயனாளிகளுக்கு ரூ.56,52,245 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இம்முகாமில், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், மகளிர் திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், அஞ்சலகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசின் சார்பில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் முன்னேற்றத்திற்காக சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதனை இப்பகுதி பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதே போன்று குழந்தைகளின் ஊட்டச்சத்தை பேணிகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க செயல்படுத்தப்படும் ஊட்டச்சத்து திட்டங்கள் குறித்தும் இப்பகுதி தாய்மார்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இல்லங்கள் தேடி மருந்து மாத்திரைகள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாளிகள் தங்களது பெயர்களை முறையாக பதிவு செய்து கொள்ளவேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க மகளிர் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இலவசப் பேருந்து வசதி திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்திலும் இத்திட்டத்தின் கீழ் தினமும் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், நமது மாவட்டத்தைச் சேர்ந்த மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கும் அனைவரின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் கல்லூரி மாணவிகள் பயன்பெறும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கல்லூரி பெண்களுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது பெண் குழந்தைகளை தவறாமல் கல்வி கற்க செய்ய வேண்டும். பெண்கள் கல்வி கற்றால் நாடு முன்னேறும், குடும்பமும் முன்னேறும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு தேர்விற்கு முயற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் சுய தொழில் செய்வதற்காக தமிழக அரசு வழங்கும் திறன் பயிற்சி வகுப்புகளை முறையாக பயன்படுத்தி சுய தொழில் செய்து தொழில் முனைவோராக மாறி இதன் மூலம் பல்வேறு நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் வழங்க முன் வர வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதே போன்று இளைஞர்கள் சுய தொழில் செய்வதற்கு திறன் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் திறன் பயிற்சிகள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் தங்களது பகுதியில் உள்ளவர்களுக்கும் விளக்கமாக எடுத்துரைத்து இத்திட்டத்தில் பயன்பெற செய்ய வேண்டும். மேலும், தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை பயனாளிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி அவர்கள் பேசினார்.

முன்னதாக, வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் கிராமப் பட்டாக்களை 100 சதவீதம் கணினியில் பதிவேற்றம் செய்த சிலம்பூர் (வடக்கு) கிராம நிர்வாக அலுவலர் திரு.மு.மாரிமுத்து, கிராம உதவியாளர் திரு.மா.தாமரைச்செல்வனுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இம்முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர்த்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

இம்முகாமில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, வேளாண் இணை இயக்குநர் பழனிச்சாமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் சா.பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆண்டிமடம் ஒன்றியக்குழுத் தலைவர் மருதமுத்து, வட்டாட்சியர் இளவரசன், ஊராட்சி மன்றத் தலைவர் வீ.மணிசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *