எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30மணிக்குள் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக பூஜாமூர்த்தியான சொக்கநாதபெருமானுடன் தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 11ம் தேதி ஆதீனத்தில் இருந்து புறப்பட்டு பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில் சொக்கநாதபெருமானுன் எழுந்தருளினார்.
அங்கு வழிபாடு நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சீர்காழி வந்தடைந்தார்.சீர்காழி நகர எல்லையான உப்பனாற்றாங்கரை வந்தடைந்த குரு லிங்க சங்கம பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழி சங்கத்தின் சார்பாக வாணவேடிக்கை,கேரள செண்ட மேளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு சொக்கநாதர் பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் மேடையில் எழுந்தருளினார்.
தொடர்ந்து 100 நாதஸ்வரம்,மேளம் இசைத்தும், பாரம்பரிய தெய்வ வேடமணிந்து பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகைபுரிந்து வரவேற்றனர். பின்னர் யானை, ஒட்டகம், குதிரை ஆகிய மங்கள வாகனங்கள் முன்னே செல்ல தருமபுரம் ஆதீனம் சொக்கநாதர்பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டார்.
வழிநெடுக்கிலும் பொதுமக்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். ஆதீனம் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கியவாறு சென்றார்.
நான்கு தேர் வீதிகளின் வழியாக சட்டநாதர் சுவாமி கோயிலை தருமபுரம் ஆதினம் வந்தடைந்து அங்கு மாசிலாமணி நிலையத்தில் சொக்கநாதர் பெருமானை எழுந்தருள செய்தார். இதில் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்காவசகதம்பிரான் சுவாமிகள், சிவகுருநாததம்பிரான்சுவாமிகள்,சீர்காழி,வைத்தீஸ்வரன்கோயில் பகுதி பக்தர்கள் உட்பட பலர் சென்றனர்.