ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை :
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஈரோடு மாவட்டம் மூன்றாவது இடத்திலும்,தமிழகத்தில் முதலிடத்திலும் இருப்பதை நாம் அறிவோம்.
மேலும் நீர் நிலைகளான அணைகள்,ஆறு,குளம் போன்றவற்றில் தண்ணீர் குறைந்தும், வறட்சி நிலையிலும் இருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றன. விவசாயமும் பாதித்துள்ளது.
இந்த நிலை மாறி நாடு செழிக்கவும், உயிரினங்கள் நலமுடன் வாழவும் இறைவனிடத்தில் மழை வேண்டி ஈரோடு மாநகரில் இஸ்லாமியர்கள் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈரோடு கருங்கல்பாளையம் ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் (கப்ருஸ்தான்) மஸ்ஜித் மற்றும் வளாகத்தில் ஒன்று கூடி சிறப்புத் தொழுகை மற்றும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இமாம் அப்துல் அஹது தாவூதி அவர்கள் மழைத் தொழுகை பற்றி விளக்கம் அளித்தார்கள்.
தாவூதிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி முஹம்மது யூசுப் தாவூதி அவர்கள் மழைத் தொழுகை நடத்தினார்கள்,
ஈரோடு மாவட்ட அரசு காஜி அவர்கள் குத்பா பிரசங்கம் செய்தார்கள்.தாவூதிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி முஹம்மது ஹுஸைன் தாவூதி அவர்கள் சிறப்புப் பிரார்த்தனை புரிந்தார்கள்.
நிகழ்வின் முடிவில், ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலவி முஹம்மது ஹபீழ் தாவூதி அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.