முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த சகோதரர்கள் கைது- கலால் போலீசார் அதிரடி நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ஆட்டோ மூலம் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டி.எஸ்.பி., சுரேஷ்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் மண்ணூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது அவ்வழியாக வந்த கூண்டு ஆட்டோ ஒன்றை சோதனை செய்தனர்.
அப்பொழுது ஆட்டோவிற்குள் சுமார் 1400 முட்டைகள் அடுக்கப்பட்டு அதன் பின்புறம் மூட்டை மூட்டையாக குட்கா பொருள் இருந்தது தெரியவந்தது.
உடனே ஆட்டோ மற்றும் ஆட்டோவில் இருந்த இருவரை ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
இவர்கள் இருவரும் வெள்ளரி தாங்கள் பகுதியை சேர்ந்த நாகராஜ்/34, சிவா/28 என்பதும், இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என்பதும் பாப்பரம்பாக்கத்தில் மளிகை கடை வைத்துள்ளார்கள் என்பதும் தெரியவந்தது.
அதேபோல இவர்கள் மண்ணூர், வளர்புரம், மேவளூர்குப்பம், தண்டலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து சுமார் 1லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.