புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் கள்ளச்சாராயம் இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மரக்காணத்தில் கள்ளச்சாராய சில்லரை விற்பனை செய்தோர் புதுச்சேரியைச் சேர்ந்த இருவரிடம் வாங்கியதாக வாக்குமூலம் தரப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தை புதுச்சேரியில் இருந்து கடத்தி சென்று தமிழகத்தில் விநியோகித்து உயிர்பலியான முழு பொறுப்பை புதுச்சேரி அரசு ஏற்க வேண்டும். கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் காவல்துறை, கலால்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராய பேர்வழிகளுக்கு புதுச்சேரி அரசு உடந்தையாக உள்ளது. காவல்துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராய விற்பனை அனுமதியை அரசு வேடிக்கை பார்க்கிறது. கலால்துறை அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வசூல் செய்து முதல்வர் ரங்கசாமிக்கு நேரடியாக பணம் தருவதை பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன்.
தற்போது தமிழகத்தில் நடந்த உயிரிழப்புக்கு புதுச்சேரி அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் . என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமிழகத்துக்கு அனுப்பி உயிர்பலி ஏற்பட்டுள்ளது ஆட்சியாளர்களால் புதுச்சேரிக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாதற்கு முக்கியக்காரணம் ஊழல்தான். இதற்கு சிபிஐ விசாரணை வைக்க தயாரா ? என்றார்.