புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணி முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டது. வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டனர்.

இதையடுத்து வரும் 28ம் தேதி திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த போது நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் எனவும், நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *