அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை100 சதவீதம் எண்ணக் கோரி ஜனநாயகசீர்திருத்த சங்கம், அபய்பக்சந்த், அருண்குமார் அகர்வால் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு 3 மனுக்களையும் ஒரே வழக்காக விசாரித்தது.மனுதாரர்கள் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே, விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். மின்னணு நடைமுறைக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது
தேர்தல் ஆணையம் தரப்பில், ‘ஒவ்வொரு தேர்தலின்போதும் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் குறித்து திட்டமிட்டு பிரச்சினை எழுப்பப்படுகிறது. இந்தஇயந்திரங்களில் எவ்வித முறைகேடும் செய்ய முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதிகள் சஞ்சீவ்கன்னா, தீபாங்கர் தத்தா நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில் கூறியுள்ளதாவது: தேர்தல் நடைமுறைகளில் கண்மூடித்தனமாக சந்தேகம் எழுப்பக்கூடாது.
அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.