பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி அவர் பைடனுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர், வரும் ஜூன் 21-ந்தேதி வரவேற்கின்றனர். பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் அவருக்கு பைடன் விருந்தளித்து உபசரிக்கிறார். இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் வசித்து வரும் ராகவேந்திரா என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகராக உள்ளார். தனது காரின் நம்பர் பிளேட்டில் எண்களுக்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வெளிப்படுத்தும் வகையில் என்மோடி என்ற பெயர் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, 2016-ம் ஆண்டு நவம்பரில் இந்த நம்பர் பிளேட்டை வாங்கினேன். அவர் எனக்கு ஒரு தூண்டுதலாக இருக்கிறார். நாட்டுக்காக, சமூகத்திற்காக, உலகத்திற்காக ஏதேனும் சில நல்ல விசயங்களை செய்ய வேண்டும் என்ற உந்துதலை அவர் எனக்கு ஏற்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு வருகை தருகிறார். அதனால், அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில், இந்திய வம்சாவளியினருடனும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.